ஸ்ரீ ராமருக்கு மட்டும் நீர்மோர்!

ஸ்ரீ ராமருக்கு மட்டும் நீர்மோர், பானகம் ஆனால் 

ஸ்ரீ கிருஷ்ணருக்கு ஏன் விதவிதமான பக்ஷணங்கள் ? 

srustidesign.blogspot.com - Sriramanavami Neivedyam

யாரவது யோசித்ததுண்டா?

ஸ்ரீ ராமரின் பிறந்தநாளானது வஸந்த காலத்தில் அதிலும் ரிது சந்தி காலத்தில் வருகிறது. ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கு மாறும் இடைப்பட்ட காலமே   ரிது சந்தி காலம் ஆகும்.

குளிர் காலத்திலிருந்து கோடை காலத்திற்கு மாறும் காலமாகும். ஆகையால் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு வகைகளையே நாம் உட்கொள்ள வேண்டும். ஆகையால் தான் ஸ்ரீராமநவமி அன்று நீர்மோர், பானகம் நிவேதனம் செய்கிறோம்.

நீர்மோர்:

तक्रं लघु कषायं 
अम्लं दीपनं 
कफवातजित् | (अ.हृ )

तक्रं என்றால் Buttermilk (மோர்)

     ➠ எளிதில் ஜீரணமாகும்.
     ➠ வயிற்று பசியை தூண்டும்.
     ➠ கஷாய புளிப்பு சுவை உடையது.
     ➠ கப, வாயுவை குறைக்கும்.

srustidesign.blogspot.com - Neer mor

இதில் பாலிலிருந்து தயிரின் தன்மையை அடைந்தவுடன் இனிப்பு சுவையிருக்கும். அது உடலிலுள்ள பித்தத்தினை குறைக்கும், உடலுக்கு வலுவூட்டும், வாயுவை குறைக்கும், ஓஜஸினை போஷிக்கும்.

ஆகையால் தான் நம் தமிழ்நாட்டில் ஓர் வழக்கம் உள்ளது. காலையில் தோய்த்த தயிர் காலை உணவிற்கும், மாலையில் தோய்த்த தயிர் இரவு உணவிற்கும் பயன்படுத்துவர். இவ்வாறு புதிய தயிரை நன்றாக கடைந்து மோராக பயன்படுத்துவர். 

நீர்மோர் செய்ய தேவையான பொருட்கள் :
   ✍ தயிர் – 1 கப்
   ✍ தண்ணீர் –  ½ கப்
   ✍ கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.)
   ✍ மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
   ✍ இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
   ✍ பச்சைமிளகாய் – அரைமிளகாய் அளவு (காரம் உங்கள் தேவைக்கேற்ப)
   ✍ உப்பு – தேவையான அளவு
   ✍ பெருங்காயம்- சிறிதளவு

செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும்.

இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய், பெருங்காயம், தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

சுவையான இந்த நீர்மோரை டம்ளரில் ஊற்றிப் பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.


தயிர் மத்து இல்லாதவர்கள், மிக்சியில் தயிரை இட்டு ஒரேயடியாக ஓட்டாமல் மூன்று முதல் ஐந்து வினாடிகள் விட்டு விட்டு ஒரு நிமிடம் வரை ஓட்டினால் மோர் தயார்.


பானகம்

ஸ்ரீ ராம நவமியின்  போது தயாரிக்கப்படும் பாரம்பரிய, ஆரோக்கியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் பானங்களில் ஒன்று பானகம். இந்த குளிரூட்டும் இனிப்பு பானம் தயாரிக்க மிகவும் எளிதானது மற்றும் தெய்வீக சுவையுடையது . இந்த பாரம்பரிய தாகத்தைத் தணிக்கும் தன்மை ஆரோக்கிய நன்மைகளுடன் ஏற்றப்பட்டுள்ளது & கோடையின் வெப்பத்திலிருந்து தப்பிக்க ஒரு சிறந்த பானம் பானகம் ஆகும்.

srustidesign.blogspot.com - Paanagam

வெல்லத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. தண்ணீர் உடலில் நீரின் அளவை சமன் செய்ய உதவுகிறது. ஏலக்காய் உடற்சூட்டை தனித்து பித்தத்தை குறைக்க உதவுகிறது.

பானகம் செய்ய தேவையான பொருட்கள் :
   ✍ நீர் - 2 கப் 
   ✍ வெல்லம்  - 1/2 கப் 
   ✍ ஏலக்காய் - 2
   ✍ சுக்கு பொடி - 1/4 tsp 
   ✍ பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை 

செய்முறை :

வெல்லத்தை நன்கு பொடியாக்கி அதை தண்ணீரில் கரைத்து அதனுடன் ஏலக்காய், சுக்கு பொடி, பச்சை கற்பூரம் ஆகிவற்றை சேர்த்து நன்கு கலக்கி பரிமாறவும்.


திருமூலர் கூற்று

"மோர் பெருக்கி, நீர் சுருக்கி, 
நெய் உருக்கி உண்பவர்தம் 
பேர் சொல்லப்போகுமே பிணி" 

என்று கூறியுள்ளார்.

அதாவது  நீரை சுருக்கியும், தயிரை பெருக்கியும், நெய்யினை உருக்கியும் உட்கொள்ளல் அவசியம். 

நீரை சுருக்கி :
उदकमाश्वासकराणां

தண்ணீரின் கடினத்தன்மையை மாற்றுவதற்கு, அந்தக் காலத்தில் நெல்லிமரக் கட்டையையும் தேற்றாங் கொட்டையையும் (தேத்தா விதை) பயன்படுத்தினார்கள். அதில் இருக்கும் பாலிபீனால் என்னும் பொருள், தண்ணீரில் இருக்கும் தாதுக்களை மென்மையாக்குவதால், நீரின் கடினத்தன்மை குறைந்துவிடுகிறது.முன்பெல்லாம் வீட்டுக் கொல்லையில் இருக்கும் கிணற்றில், நெல்லிமரக் கட்டையைப் போட்டுவைப்பது வழக்கம். இதையே நீரை சுருக்கி என்று கூறியுள்ளார். 

மோரை பெருக்கி :
எப்போதும் தயிரை நன்றாக தண்ணீர் விட்டு கடைந்து மோராக்கி குடிப்பதே நம் உடலுக்கு நல்லது. 

நெய்யினை உருக்கி :
सर्पिवातपित्तप्रशमनं  

கெட்டியாக உள்ள நெய்யினை எப்போதும் உருக்கிப்  பயன்படுத்தல் சாலச் சிறந்தது.

புளித்த தயிருடன் சீரகம் சேர்த்தால் அது  எளிதில் ஜீரணிக்கும் தன்மையை அடையும்.  எனவே தான் நம் வீட்டில் புளித்த தயிர் இருந்தால் அதை மோர்க்குழம்பு செய்யப் பயன்படுத்துவர்.

இவ்வகையான மோரினை உட்கொண்டால் இவ்வசந்த காலத்தில் ஏற்படும் தொற்று நோய், நீர்க்கடுப்பு, மூலம், வயிற்றுப்போக்கு போன்ற பலவிதமான நோய்களிலிருந்து காக்கும் என்பதால் ராமருக்கு நீர்மோரினை நிவேதனம் செய்கின்றோம். 

"तक्रं शक्रस्य दुर्लबम् |"

அதாவது மோர் தேவர்களுக்கு அரிது. எப்படி நமக்கு அமிர்தம் கிட்டாதோ அது போல தேவர்களுக்கு மோர் கிட்டுவது மிக அரிது. 

ஆகவே நம் பூலோகத்தில் மோர் அமிர்தத்திற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. ஆகையால் தான் சந்திரனுக்கு - ரோகமும்; கணேஷருக்கு - உதரரோகமும் ; மஹா விஷ்ணுவிற்கு - நீல நிறமும்; சிவனுக்கு - விஷமும் தங்கியிருக்காது. 

இத்தகைய அமிர்தத்திற்கு இணையான நீர்மோரினை இக்காலத்தில் பருகி நோயிலிருந்து நம்மை காத்துக் கொள்வோமாக!


மேலும் சந்தேகங்களுக்கு,
Ayurvedic Consultant
Chennai.

Post a Comment

0 Comments